Thursday 5 March 2009

பாகிஸ்தானில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை குறிவைத்தது யார்?


போர் தனித்து களமுனைகளில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக களமுனை உருவாக்கங்களாலும் நிர்ணயிக்கப்படும் என்பதை லாகூரில் நடைபெற்ற சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீதான தாக்குதல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் பா.மதியழகன்.
சுமார் மூன்று தசாப்த காலமாக இலங்கையில் நடைபெறுகின்ற போர், அனைத்துலக சக்திகளின் விளையாட்டு அரங்காக சிறிலங்காவையே மாற்றி விட்டது போன்ற செய்திகள் வெளிவருவது பலருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால், இன்னொரு நாட்டில் சிறிலங்காவை பந்தாகப் பாவிப்பார்கள் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்?

நிச்சயமாக, இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ (RAW) வை தவிர பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஓகஸ்ட் 14, 2006 இல் சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பசீர் வலி முகமட் மீது கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலின் இலக்காக தூதுவரே இருந்தாலும் அவர் நூலிழையில் உயிர் தப்பியிருந்தார்.

இந்தத் தாக்குதலில், சிறிலங்கா அதிரடிப்படையினர் நால்வர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்திருந்தனர்.

வழக்கம் போலவே, புலிகளே தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் என சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியது.

ஆனால், சிறிது காலத்திற்குப் பின்னர் சிறிலங்காவின் ஊடகவியலாளர் குழுவொன்று பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்து.

இந்த பயணத்தின் ஓர் அங்கமாக, சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பசீர் வலி முகமட்டையும் ஊடகவியலாளர்கள் சந்தித்திருந்தனர்.

இன்னொரு வகையில் கூறப்போனால், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தது.

ஏனெனில், கொழும்பில் பாகிஸ்தானிய தூதுவர் மீதான தாக்குதலின் பின்னணியில் றோவே இருந்தது என்பதற்கான போதிய ஆதாரங்களை ஐ.எஸ்.ஐ திரட்டியிருந்தது.

அதன் அடிப்படையிலேயே, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக தன்மீதான தாக்குதலுக்கு றோவே பின்னணியிலில் இருந்தது என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்த பசீர் வலி முகமட், விடுதலைப் புலிகளுக்கும் தன் மீதான தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என வெளிப்படையாகத் தெரிவித்து, விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டை அடியோடு மறுத்திருந்தார்.

பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்குமான நெருக்கமான உறவின் உயிர்நாடியாக பசீர் வலி முகமட் விளங்கினார்.

இலங்கையில் பாகிஸ்தான் ஆழமாக காலூன்றுவது தனது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் எனக் கருதிய இந்தியா, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நடவடிக்கைகளின் ஆணிவேராகத் திகழ்ந்த பசீர் வலி முகமட்டை கொழும்பில் வைத்து தீர்த்துக்கட்ட முனைந்து தோல்வியடைந்தது.

இருப்பினும், தனது புலனாய்வுப் பணியை தொடர்ச்சியாக முனைப்படுத்தியது.

இலங்கையை பொறியாக வைத்து, பாகிஸ்தானை நெருக்கடிக்குள் தள்ளுவதன் ஊடாக பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ உறவில் விரிசலை ஏற்படுத்தி, தனது கொல்லைப்புறத்தில் தனக்கு எதிரான சக்திகள் காலுன்றுவதை நிறுத்த முடியும் என 'றோ' திடமாக நம்புகிறது.

புடவை வியாபரிகள் போல வேடம் தரித்து, மட்டக்களப்பில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் உளவுத் தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த றோவின் இரு முகவர்கள் ஐ.எஸ்.ஐ முகவர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை 'றோ' சிறிலங்காவில் இறுக்கமாக்கியிருந்தது.

இருந்தபோதும், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ உறவுகள் வலுப்பட்டனவே தவிர, வலிமை இழக்கவில்லை. இது றோவுக்கு கடும் எரிச்சலை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

அதேவேளையில், ஐ.எஸ்.ஐயின் பின்னுதவியுடன் பாகிஸ்தானை தளமாகக்கொண்ட லஸ்கார் - ஈ - தைபா என்ற தீவிரவாத அமைப்பு மும்பாய் மீது மேற்கொண்ட தாக்குதல் றோவுக்கு தலைகுனிவை மட்டுமல்ல, தடுமாற்றத்தையும் உண்டு பண்ணியிருந்தது.

குறிப்பாக, பெருமளவான அமெரிக்க, ஐரோப்பா சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டமை, அனைத்துலக ரீதியில் இந்தியாவுக்கு அவப்பெயரை உண்டு பண்ணியிருந்தது.

அதற்கு இராணுவ ரீதியில் பதிலடி கொடுப்பதற்கு இந்தியா திட்டமிட்டது. ஆனால், கொண்டலீசா றைசின் தலையீடு அதற்கு இடமளிக்கவில்லை.

ஆனால், தனக்கு ஏற்பட்ட தலைக்குனிவுக்கு எதிராக பழிவாங்குவதற்கு 'றோ' துடியாய் துடித்து தருணம் பார்த்திருந்தது.

இதேவேளை, சிறிலங்காவுக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் தானே வழங்குவதனூடாக பாகிஸ்தானின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கலாம் என செயற்பட்ட புதுடில்லிக்கு கடந்த பெப்ரவரி 27 ஆம் நாள் தொடங்கிய வெளிநாட்டு அமைச்சர்களின் 31 ஆவது சார்க் மாநாட்டில், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவுகள் மென்மேலும் வலுப்படத்தக்க வகையில் இணங்கப்பட்ட உடன்பாடுகள் கடும் விசனத்தையும், சினத்தையும் உண்டு பண்ணியிருந்தது.

அதன் காரணமாகவே, தமிழ்மக்களை கொன்றொழிப்பதற்கு முதுகெலும்பாக இருந்து வந்த காங்கிரஸ் விற்பன்னர்கள் திடீரென தமிழ்மக்கள் மீது அக்கறை உள்ளது போல் வெளிக்காட்ட முற்பட்டார்கள்.

கடந்த ஜனவரி 28 ஆம் நாள் மகிந்த ராஜபக்சவுடனாக சந்திப்பைத் தொடர்ந்து இராணுவ வெற்றிகள் அரசியல் தீர்வுக்கு வழிகோலுவதோடு, வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலை தோன்றுவதற்கு அடிப்படையாகும் என்ற சாரப்பட கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சரியாக ஒரு மாதம் கழிந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றி, புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் கருத்து என்பது, சிறிலங்கா தொடர்பான காய்நகர்த்தலில் 'றோ' மீண்டும் ஒருதடவை தோற்றுப் போனது என்ற கருத்தின் மறுவடிவம் எனக் கொள்ளலாம்.

இதுவும், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய வகையில், லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது தாக்குதலை நடத்துவதற்கு 'றோ' திட்டமிட்டமைக்கான பிரதான காரணம்.

அத்துடன், தம்புள்ளையில் நடைபெற்ற போட்டிகளின் போது, இந்திய துடுப்பாட்ட அணி; சிங்கள காடையர்களின் கல்லெறிக்கு தொடர்ச்சியாக இருமுறை உட்பட்டது.

இது, தனது நாட்டு அணியினருக்கு சிறிலங்கா உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்ற மனோபாவத்தை புதுடில்லி அதிகார வர்க்கத்தினருக்கு உண்டு பண்ணியிருந்ததாக அறிய முடிகிறது.

அது மட்டுமன்றி, இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததற்கு பதிலாகவே, சிறிலங்கா அணி குறித்த ஆட்டங்களில் பங்குபற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது.

இவையும், றோவின் தரவு சேகரிப்பு கோவைகளில் துணைக்காரணிகளாக அடையாளமிடப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பு பெருமளவில் உள்ளது.

இவை அனைத்தையும் தாண்டிய உச்சக் காரணியாக, அனைத்துலக மட்டத்தில் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக வெளிப்படுத்துவதற்கு, உலகளாவிய ரீதியல் அனுதாபத்தை ஈட்டக்கூடிய ஒரு தாக்குதல் அவசியம் என திட்டமிட்ட 'றோ', அதற்கான மிகச்சிறந்த இலக்காக சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தெரிவு செய்தது.

இதன் ஊடாக ஒரே கல்லில் இரு மாங்காயை உடைத்துள்ளது.

அதேவேளை, இந்தப் பழியையும் புலிகள் மீது போடக்கூடிய கைங்கரியங்களில் 'றோ' ஈடுபடத் தொடங்கிவிட்டது.

ஆனால், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பிணைப்பை விரும்பாத எதிரிகளே லாகூர் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

அவதானங்களை கோர்வையாக்குகின்ற வாசகர்களுக்கு லாகூர் தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது தெளிவாக புரிந்திருக்கும்.


நன்றி
புதினம்.காம்

No comments:

Post a Comment